ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளோம்: பிரதமர் மோடி

குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ஏழைகளின் வாழ்க்கை தரத்தை பாஜக அரசு உயர்த்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். சூரத் விமான நிலையத்தில் மோடியை குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் வரவேற்றார். பின்னர் மோடி, சூரத்தில் ரோடுஷோ நடத்தினார். கோதாதர பகுதியில் இருந்து லிம்பயத் வரை காரில் இருந்தபடி சாலையின் இரு புறமும் திரண்டிருந்த மக்களுக்கு கையசைத்து சென்றார். அப்போது மோடியை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதையடுத்து, குஜராத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த பல திட்டங்களை தொடக்கிவைத்த பின்னர் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 20 ஆண்டுகளில் சூரத் அபரிமிதமாக முன்னேறியுள்ளது. வைர ஆராய்ச்சி மற்றும் வணிக (டிரீம்) நகரத் திட்டம் முடிந்ததும், சூரத் உலகின் பாதுகாப்பான மற்றும் வசதியான வைர வர்த்தக மையமாக உருவெடுக்கும். நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, இங்கு விமான நிலையத்தின் அவசியத்தை அப்போதைய மத்திய அரசிடம் விளக்கி அலுத்துவிட்டோம். இப்போது, ​​இங்குள்ள விமான நிலையத்திலிருந்து பலர் வந்து செல்வது நகரத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. இது இரட்டை இயந்திர அரசாங்கத்தின் பலன். சூரத்தின் வைரம் மற்றும் ஜவுளித் தொழிலை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. டிரீம் சிட்டி திட்டம் நிறைவடைந்தவுடன் உலகின் பாதுகாப்பான மற்றும் வசதியான வைர வர்த்தக மையமாக சூரத் உருவெடுக்கும்.

சூரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 80,000 வீடுகளைக் கட்டி ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் படி, 4 கோடி ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைத்துள்ளது. அதில் 32 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். சூரத்தில் பயனடைந்தவர்கள் சுமார் 12.5 லட்சம் பேர். இந்தியா முழுவதிலும் உள்ளவர்கள் சூரத்தில் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட இது ஒரு மினி இந்தியா. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக உலகின் முதல் சிஎன்ஜி டெர்மினலுக்கு பாவ்நகரில் அடிக்கல் நாட்டுவதுடன், 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். குஜராத்தில் முதன்முறையாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அம்பாஜி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு வசதியாக அகல ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், அம்பாஜி கோயிலுக்குச் சென்று, கப்பர் தீர்த்தத்தில் நடக்கும் மகா ஆரத்தியிலும் அவர் கலந்துகொள்கிறார். அகமதாபாத்தில் நடைபெறும் நவராத்திரி விழாக் கொண்டாட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.