பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது?- உச்சநீதிமன்றம்!

பேரறிவாளனை ஏன் விடுவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழுவால் பேரறிவாளன் கடந்த 1991 ஜூன் 11-இல் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தினால் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 2014 பிப்ரவரி 14-ஆம் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டுக்கு பின் பேரறிவாளனுக்கு அவ்வப்போது பரோல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் 9-ம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவு சிறை அதிகாரிகளுக்கு கிடைக்காததால் பேரறிவாளன் பரோலில் தொடா்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்பின், உச்சநீதிமன்ற உத்தரவு, புழல் சிறைத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்ததை அடுத்து பேரறிவாளன் ஜோலாா்பேட்டையில் இருந்து செவ்வாய்க்கிழமை புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டாா். பல்வேறு சட்ட நடைமுறைகளுக்கு பின்னா் பேரறிவாளன் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் பேரறிவாளன் தரப்பில் ‘விடுதலை அளிக்கக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் ஆளுநர் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் உள்ளார்’ என வாதிட்டப்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் கூறியதாவது:-

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் செயல். ஆளுநர் உத்தரவுக்காக எத்தனை முறை வழக்கை ஒத்திவைப்பது. மாநில அமைச்சரவையின் முடிவு ஆளுநருக்கு மகிழ்ச்சி தரவில்லை என்றால், அதனை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துவிடுவாரா? பேரறிவாளன் உட்பட 7 பேரை யார் விடுவிப்பது என்பதில் குழப்பம் நீடிக்கும் நிலையில் அவர் ஏன் சிறையில் இருக்க வேண்டும்? பேரறிவாளனை ஏன் நீதிமன்றமே விடுவிக்கக் கூடாது? பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு. இவ்வாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நளினிக்கு, 4-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பெண்கள் தனிச்ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த முருகனின் மனைவி நளினிக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கோரி அவரது தாயார் பத்மா கடந்த டிசம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த கோரிக்கையை ஏற்று நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் 27-ந்தேதி நளினி ஒரு மாதம் பரோலில் வந்து காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நளினி பரோலை நீட்டிக்க வேண்டும் என மனு வழங்கினார். இதையடுத்து, நளினியின் மனுவை சிறை நிர்வாகம் அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் இன்று ஜெயிலுக்கு திரும்ப வேண்டிய நளினிக்கு, 4-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நளினி மே மாதம் 27-ந்தேதி வேலூர் ஜெயிலுக்கு திரும்ப வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.