வடகொரியா ஏவுகணை வீச்சு: ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை!

ஜப்பான் நாட்டின் மீது வட கொரியா ஏவுகணை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை கொண்டு தாக்கக் கூடும் எனவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜப்பான் கடற்பகுதியில் வட கொரியா ஏவுகணை வீசியுள்ளது. இந்த ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. இதனால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏவுகணை வீச்சை தொடர்ந்து, ஜப்பான் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த 10 நாள்களுக்குள் வட கொரியா இரண்டு குறுகிய தூரம் பாய்ந்து இலக்குகளை தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை நான்கு முறைக்கு மேல் ஏவி சோதனை நடத்தியுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான அந்நாட்டு அரசு, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடற்படைகள் கொரிய கடற்பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஏவுகணை வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் கூறுகையில், “ஏவுகணை வட கொரியாவின் சீனாவுடனான மத்திய எல்லைக்கு அருகிலுள்ள முப்யோங்-ரியில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 7:23 மணியளவில் ஏவப்பட்டது. இது பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பானின் தோஹோகு பகுதியில் அதிகபட்சமாக 1,000 கிலோமீட்டர் (621 மைல்) உயரத்தில் 20 நிமிடங்களுக்கு சுமார் 4,600 கிலோமீட்டர்கள் (2,858 மைல்கள்) பறந்து சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்” என கூறியுள்ளார்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்த ஏவுகணை சோதனையை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் மோசமானது என அவர் தெரிவித்துள்ளார். ஜப்பான் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை செலுத்தும் வடகொரியாவின் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற முடிவை வன்மையாக கண்டிக்கிறோம் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் ஏவுகணையை சுட்டு வீழ்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, ஜப்பான் அரசு கூறியுள்ளது. மேலும் வடகொரியாவில் இருந்து மீண்டும் மீண்டும் ஏவுகணை வீசப்பட்டால், ஜப்பான் தனது பாதுகாப்பை பலப்படுத்த எதிர்தாக்குதல் நடத்த தயங்காது என்றும், பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா கூறியுள்ளார்.

அணு ஆயுதங்களை சோதிக்க கூடாது என்று உலக அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத வட கொரியா, தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் தொடர்ந்து சோதித்து வருவதுடன் தடை செய்யப்பட்ட ஆயுதத் திட்டங்களையும் இரட்டிப்பாக்கியுள்ளது. கடந்த 10 நாட்களில் வட கொரியா 5 முறை ஏவுகணை சோதனை நடத்தி உள்ள நிலையில், தற்போது ஜப்பான் மீது ஏவுகணை வீசப்பட்டதை வைத்துப் பார்க்கையில் வடகொரியா எந்த நேரத்திலும் ஜப்பான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜப்பான் வடகொரியா இடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.