56 சதவீத இட ஒதுக்கீடு: கர்நாடக அரசின் துணிச்சலான நடவடிக்கை: ராமதாஸ்!

பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் ஆக உயர்த்த கர்நாடக மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 17சதவீதம் ஆகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் ஆகவும் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மிகச்சிறந்த சமூகநீதி காக்கும் நடவடிக்கையாகும்.

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும் என்று 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து வலியுறுத்தி வருகிறேன். இந்த கோரிக்கையையும் வலியுறுத்தி தான் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பதால், மொத்த இட ஒதுக்கீட்டையும் 56% ஆக உயர்த்த கர்நாடகம் தீர்மானித்திருப்பது துணிச்சலான நடவடிக்கை ஆகும். தமிழ்நாட்டிலும் அத்தகைய துணிச்சலான நடவடிக்கையை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.