ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பேட்டை பரிசளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று நடந்த 13வது வெளியுறவு அமைச்சர்களின் கட்டமைப்பு உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் காலிஸ்தான் விவகாரம் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகள் தொடர்பான பிரச்சனைகளை இந்தியா எழுப்பி வருகிறது. ஒரு ஜனநாயக சமூகத்தில் அளிக்கப்படும் சுதந்திரங்கள், இதுபோன்ற சக்திகளால் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது . இந்த சக்திகள் உண்மையில் வன்முறை மற்றும் மதவெறியை ஆதரிக்கின்றன. ஜனநாயகம் உள்நாட்டில் மட்டும் எப்படி செயல்பட வேண்டும் என்பதை மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் ஜனநாயகம் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும், மற்ற ஜனநாயக நாடுகளுக்கு ஜனநாயகம் செய்ய வேண்டிய பொறுப்பும் உள்ளது என்பதை உன்மையாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த செப்டம்பர் 15 அன்று, கனடாவில் டொராண்டோவின் சுவாமிநாராயண் கோவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் சிதைக்கப்பட்டது. அங்கு இந்தியாவை எதிர்த்து வாசகங்கள் எழுதப்பட்டன. இதனை தொடர்ந்து, இந்தியாவின் நட்பு நாடான கனடாவில், இத்தகைய செயல்பாடுகள் அரசியல் ஆதரவுடன் நடக்க அனுமதிக்கப்பட்டிருக்க கூடாது என்று இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா கான்பெராவில் உள்ள போர் நினைவுச் சின்னத்தை பார்வையிட வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சென்றிருந்தார். அங்கு ஆஸி. துணைப்பிரதமரும் ராணுவ அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெஸ் அவர்களை சந்தித்துப் பேசினார். இருவரும் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். நமது வளர்ந்து வரும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பின் மூலம் அமைதியான, வளமான மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பகுதியை உறுதி செய்கிறதென அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். பின்னர் விராட் கோலியின் பேட்டை பரிசளித்தார்.
இது குறித்து ஆஸி. துணைப்பிரதமரும் ராணுவ அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜெய்சங்கர் அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்களை பலவிதமான விஷயங்கள் இணைத்துள்ளது; இதில் கிரிக்கெட்டும் ஒன்று. விராட் கோலியின் கையெழுத்து போடப்பட்ட கிரிகெட் பேட்டை எனக்கு பரிசளித்து ஆச்சர்யப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.
