தைவான் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்: அதிபர் ஷி ஜின்பிங்!

சீனாவின் முழு கட்டுப்பாட்டின் கீழ் ஹாங்காங்கை கொண்டு வந்து விட்டோம் என்றும், தைவான் விவகாரத்திலும் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும், சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்து உள்ளார்.

அண்டை நாடான சீனாவின் அதிபராக 2012 ஆம் ஆண்டு முதல் ஷி ஜின்பிங் பதவி வகித்து வருகிறார். சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்கட்சியின் தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கூட்டத்திலும் சீன அதிபராக மீண்டும் ஷி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் நேற்று தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தை சீன அதிபரும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஷி ஜின்பிங் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 300 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் சீனாவின் அதிபராக ஷி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

கம்யூனிஸ்ட் தேசிய காங்கிரஸ் கூட்டத்தை தொடங்கி வைத்து சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசியதாவது:

ஹாங்காங்கை சீனா தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது. குழப்பத்தில் இருந்து ஹாங்காங்கை ஆட்சிக்கு மாற்றி உள்ளது. தைவான் பிரிவினைவாதம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்ப்பதில் சீனா உறுதியாகவும், பெரும் போராட்டத்தையும் நடத்தி வருகிறது.
தைவான் பிரச்னைக்கு தீர்வு காண்பது சீன மக்களின் கையில் தான் உள்ளது. படைகளை பயன்படுத்துவதற்கான உரிமையை சீனா ஒருபோதும் கைவிடாது. காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய நிர்வாகத்தில் சீனா தீவிரமாக பங்கேற்கும்.

சீனா, அனைத்து வகையான மேலாதிக்கத்தையும், அதிகார அரசியலையும் உறுதியாக எதிர்க்கிறது. மற்ற நாடுகளின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதை எதிர்க்கிறது. உயர் தர பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு சீனா செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான பிரச்னை ஒரு புறமிருக்க தைவானுடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது. புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் மூலங்கள் மற்றும் 5ஜி தொலை தொடர்பு வசதிகள் உள்ளிட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையேயும் கையெழுத்தாகியுள்ளது. இதனை தைவான் நாட்டின் பொருளாதரத் துறை அமைச்சர் வாங் மெய் ஹுவா உறுதிப்படுத்தியுள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

அமெரிக்கா மற்றும் தைவானைச் சேர்ந்த நிறுவனங்கள் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் அமெரிக்கா மற்றும் தைவான் இடையே பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் மூலங்கள் மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் சிறப்பாக அமையும். இந்த பயணத்தின் மூலம் தைவானுக்கு மேலும் பல துறைகளில் அமெரிக்காவின் உதவி கிடைக்கும் என்றார்.