தமிழகத்தில் தீண்டாமை பள்ளிகளில், கோவில்களில் தொடர்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஹரிஜன மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழா மற்றும் ஹரிஜன் சேவா சங்கத்தின் 90 ஆண்டு விழா சென்னையில் உள்ள எஸ்ஆர்எஸ் சர்வோதயா பள்ளியின் மகளிர் விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை மதம், இனம், மொழி என பிரித்தார்கள். அவர்களை எதிர்த்துப் போராடிய மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது தான் ஹரிஜன சங்கம். மகாத்மா காந்தி ஒருவர் மட்டுமே இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்தினார். நாம் எல்லோரையும் ஒரே குடும்பமாக மாற்றினார். அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியை கொண்டுவருவதில் மகாத்மா காந்தி தீவிரமாக இருந்தார். காந்தியின் மறைவுக்குப் பின்னர் வசதி படைத்தவர்களுக்கே எல்லாம் என்ற நிலை உருவானது.

கல்வி, தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு என எல்லாவற்றிலும் தமிழகம் முன்னிலையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கல்வித்துறையில் வளர்ச்சி இந்தியாவில் கல்வித்துறையில் கணக்கிட்டால் 6 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 28 சதவிகிதம் மட்டுமே பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால் தமிழகத்தில் 51 சதவிகிதம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். இதை எண்ணி நாம் பெருமை கொள்ள வேண்டும். இன்னும் உற்றுக் கவனித்தால் ஹரிஜன குழந்தைகளில் வெறும் 13 முதல் 14 சதவிகித குழந்தைகளே பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால் தமிழகத்தில் 24 சதவிகித ஹரிஜன மக்கள் வசிக்கின்றனர். ஆனால் சில சமூகத்தினர் மட்டுமே 70 முதல் 75 சதவிகிதம் அளவிற்கு கல்வி வளர்ச்சி பெறுகின்றனர். இந்த சதவிகிதத்திற்கான இடைவெளியை தான் நாம் பார்க்க வேண்டும்.

இன்னும் பல இடங்களில், பல கோவில்களில், பல பள்ளிகளில் ஹரிஜன மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை உள்ளது. தீண்டாமை கொடுமை நடத்தும் மக்கள் இன்னும் இங்கு உள்ளனர். தீண்டாமை கடைப்பிடிப்பதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் அது தொடர்கிறது. ஹரிஜன பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சகித்துக்கொள்ள முடியாதது. ஹரிஜன மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் அதிகம். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் 86 சதவிகிதம் பேர் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார்கள். இந்த குற்றங்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படாததே, இக்குற்றங்கள் தொடர காரணம். ஹரிஜன மக்கள் நம் மக்கள். அவர்களின் நிலை மேம்பட உறுதுணையாக நிற்க வேண்டியது நம் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.