இந்தியை திணிக்க எந்த கொம்பனாலும் முடியாது: துரைமுருகன்

திமுக தோன்றியதே இந்தியை எதிர்ப்பதற்காகத்தான் என்று சட்டசபையில் பேசிய துரைமுருகன் கூறியுள்ளார். இலட்சியமே இந்தி திணிப்பு எதிர்ப்புதான் என சொல்வது கருணாநிதி மகனால் மட்டும் முடியும் என துரைமுருகன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

இந்தி திணிப்பு தொடர்பான பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசின் தனித்தீர்மானம் சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழித்தார். அப்போது பேசிய அவர், வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் என்ற கொள்கைக்கு சொந்தக்காரர்கள் நாம். ஆளும் பாஜக அரசானது இந்தி திணிப்பை தனது வழக்கமாக கொண்டுள்ளது. இந்தி மொழிக்கு அளிக்கும் முக்கியத்துவம், மற்ற மொழிகளை அழிக்கிறது. பல்வேறு இன, மொழிகளை உடைய இந்தியாவை மாற்ற நினைக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே மொழி என திணிக்க முயற்சிக்கிறார்கள். ஒரு மொழி ஆதிக்கம் கூடாது என இதுவரை இருந்த பிரதமர்கள் உணர்ந்து இருந்தார்கள்.

இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை வலுப்படுத்தும் போர்வையில், இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்த பாஜக துடிக்கிறது. கேவி பள்ளிகள் முதல் ஐஐடி வரை இந்தி மட்டும் தான் என்றால் மற்ற மொழி மக்களுக்கும் இந்த கல்வி நிறுவனங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தடுக்க நினைக்கிறார்கள். முழுக்க முழுக்க இந்திக்காவகே துடிக்கிறது அவர்களது இதயம். இந்தி மொழி பயன்பாடு அடிப்படையில் இந்தியாவை மத்திய பாஜக அரசு 3-ஆக பிரிக்க பார்க்கிறது. இந்தி மொழி பயன்பாடு அதிகம் உள்ள மாநிலங்கள், இந்தி மொழி பயன்பாடு குறைவாக உள்ள மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என்று 3 ஆக இந்தியாவை பிரிக்கிறார்கள். நாம் 3வதாக இருக்கிறோம். ஆனால், பெரும்மொழி மற்றும் பயன்பாட்டிற்கு சொந்தக்காரர்களாக இருக்கக்கூடிய நம்மை 3ஆம் தர குடிமக்களாக ஆக்கக்கூடிய முயற்சிகளுக்கு நாம் எதிர்குரல் எழுப்பிட வேண்டும்.

இந்திக்கு தாய்ப்பாலும் இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு பேராபத்தை விளைவிக்கக்கூடியது. இந்தி மொழி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலை நாட்ட வேண்டும்’ என்றார்.

இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக சட்டசபையில் எம்எல்ஏக்கள் பேசினர். இந்தியை எந்த ரூபத்திலும் தமிழ்நாட்டில் எந்த கொம்பனாலும் திணிக்க முடியாது என்று திமுக பொதுச்செயலாளரும் அவை முன்னவருமான துரைமுருகன் பேசினார். 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் நானும் ஒருவன் என்று கூறினார். ஜுவாலை இல்லாத அனலாக தந்திரமாக, வகிக்கும் பதவிக்கு பொறுப்பாக தீர்மானத்தை அடக்கி வாசித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்றும் துரைமுருகன் கூறினார். திமுக தோன்றியதே இந்தியை எதிர்ப்பதற்காகத்தான் என்றும் இலட்சியமே இந்தி திணிப்பு எதிர்ப்புதான் என சொல்வது கருணாநிதி மகனால் மட்டும் முடியும் என துரைமுருகன் நெகிழ்ச்சியுடன் பேசினார்.