மலேசியாவில் நவம்பர் 19-ல் வாக்குப்பதிவு!

மலேசியாவில் ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் தற்போது பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலேசியாவில் ஆளும் கூட்டணியின் இடைக்கால அரசிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், புதிதாக தோ்தல் நடத்தி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நோக்கில் தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரதமர் சாப்ரி யாகூப் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மலேசியாவில் பொதுத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 222 இடங்களுக்கு நவம்பர் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், இதற்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 5ஆம் தேதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.