ஆறுமுகசாமி அறிக்கையில் நுட்பமான பல தகவல்கள் சொல்லப்படவில்லை: அன்புமணி

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் நுட்பமான தகவல்கள் சொல்லப்படவில்லை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணைய விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசனின் அறிக்கை ஆகியவை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த அறிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த போது அவர் கூறியதாவது:-

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேர்த்தியாக இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆறுமுகச்சாமி ஆணைய அறிக்கை பார்த்தால் புரோபஷனலாக இல்லை. இதனை சட்டத்தின் முன்பு எடுத்து சென்றால் ஒன்றுமே ஆகாது. இதை வைத்து அரசியல் பண்ணலாம். அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றுமே இல்லை. ஏனென்றால் இன்னும் டெக்னிக்கல்லாக நிறைய விஷயங்கள் அதில் சொல்லப்படவில்லை. இதனை வைத்து அரசியல் செய்யலாம். சட்டமன்றத்தில் எடுப்படுமா? என்பது கேள்விக்குறிதான்.

அருணா ஜெகதீசன் அறிக்கையில் 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். கூடுதல் இழப்பீடு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அறிக்கையை முழுமையாக பார்த்து என்னென்ன சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். மேலும் இந்த அறிக்கையை ஒரு பாடமாக வைத்து காவல்துறை கற்று கொள்ள வேண்டும். ஏனென்றால் யாரும் மனிதரை கண்மூடித்தனமாக தாக்க முடியாது. துப்பாக்கியால் சுடுவது என்பது உச்சக்கட்டமானது. சாதாரணமாக அடிக்கவே கூடாது. இதனால் காவல்துறை இதனை படிப்பினையாக எடுத்து கொண்டு வருங்காலத்தில் அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.