பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ், பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்தன. கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மார்டன்ட் விலகியதைத் தொடர்ந்து, ரிஷி சுனக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் ரிஷி சுனக்கிற்கு 128 எம்.பி.க்களின் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் பிரிட்டன் பிரதமராவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்கும் உங்களுடன் உலகளாவிய சிக்கல்கள் மற்றும் 2030ஆம் ஆண்டை நோக்கிய இலக்கை அடைய இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருக்கிறேன். இரு நாடுகளுக்கிடையேயான வரலாற்றுரீதியிலான உறவை மீட்கும் பாலமாக இருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.