குஜராத் மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் தேதி குறித்து தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக குஜராத் தேர்தல் நடக்கிறது.
குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது பாஜக 111, காங்கிரஸ் 62 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளன. இம்மாநில சட்டமன்றத்திற்கான பதவிக்காலம் வரும் பிப்ரவரி 18, 2023 உடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வந்தது. ஹிமாச்சல் பிரதேசத்துடன் குஜராத் மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தள்ளி போடப்பட்டது.
இன்று பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி குறித்து அறிவித்தார். இதுகுறித்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:-
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெறும். குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதியுடன் முடிவடைகிறது. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகளில்4.90 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் மொத்தம் 51.782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநில தேர்தலில் 4.6 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 80 வயதானவர்கள், 40 சதவீதம் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்களாக இருந்தால் அதுபற்றி கட்சியினர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். குற்றத்திற்கான காரணம், வழக்குகள் உள்ளிட்ட விஷயங்கள் Know Your Candidate App மூலம் தெரியப்படுத்துவது அவசியம். இதேபோல் வாக்காளர்கள் ஏதேனும் சிரமங்களை, பிரச்சினைகளை எதிர்கொண்டால் cVIGIL என்ற ஆப் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தலாம் எனக் கேட்டுக் கொண்டார்.