வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தரும்படி முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி என மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறும் கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி என மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இலங்கை மக்களுக்கு உதவவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி. இதுபோன்ற மனிதாபிமான உதவிகள் இரு நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்த உதவும் என பதிவிட்டுள்ளார்.