ஜப்பான் பிரதமர் வாடிகனில் போப் பிரான்சிஸ் உடன் நாளை சந்திப்பு

ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா வாடிகனில் நாளை போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேசுகிறார்.

ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த வெள்ளி கிழமை தொடங்கிய இந்த பயணத்தில் இந்தோனேசியா, வியட்னாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, இத்தாலி நாட்டுக்கு கிஷிடா இன்று செல்கிறார். அதன்பின்பு இங்கிலாந்து நாட்டுக்கு அவர் செல்ல இருக்கிறார்.

உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது மற்றும் ஆற்றல் துறையில் வளர்ந்து வரும் சீனா ஆகியவற்றை முன்னிட்டு நட்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்காக கிஷிடாவின் இந்த பயணம் அமைந்துள்ளது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா வாடிகனில் நாளை போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேசுகிறார். இதனை ஜப்பானில் இருந்து வெளியாகும் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே 2014ம் ஆண்டு வாடிகனுக்கு பயணம் மேற்கொண்டார். 8 ஆண்டுகளுக்கு பின்பு முதன்முறையாக வாடிகனுக்கு ஜப்பான் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்த சந்திப்பில், அணு ஆயுதங்களற்ற உலகிற்கான ஆதரவை போப் பிரான்சிஸிடம் ஜப்பானிய பிரதமர் கிஷிடா கோருவார் என கூறப்படுகிறது.