கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை!

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி விட்டது. இதனால் மனம், உடல், பொருளாதார ரீதியாக தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கடலுக்கு செல்லும் மீனவர்கள் கரை திரும்புவதும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையும் நீடித்து வருகிறது. நேற்றும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதோடு அவர்களின் மீன்பிடி படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 5ம் தேதி மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட சிறுவன் உட்பட 15 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நிரஞ்சனி முரளிதரன் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் மீனவர்கள் பயன்படுத்திய ஒரு படகுக்கான விசாரணை வரும் 25ஆம் தேதியும், மற்றொரு படகுக்கான விசாரணை ஆறு மாதத்திற்கு பிறகு விசாரிக்கப்படும் எனவும் தீர்பளித்தார். விடுதலை செய்யப்பட்ட 15 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.