ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

டேன் டீ தொழிலாளர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தமிழக அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன. திமுக அரசு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தொழிலாளர்களை வஞ்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின். தமிழக அரசைக் கண்டித்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் வரும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்நிலையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் ‘அரசு தேயிலைத் தோட்டம் திட்டம்’ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தினை செம்மைப்படுத்திட 1976 ஆண்டு, அப்போது முதலமைச்சராக பதவி வகித்த கருணாநிதியால் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (TANTEA) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, நிறுவனங்களின் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய 2,445 குடும்பங்களுக்கு (4082 தொழிலாளர்கள்), கடந்த 1976ஆம் ஆண்டு முதல் நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் தங்குவதற்கு வீடு மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள இந்நிறுவனத்தில், தற்போது 3,569 நிரந்தரத் தொழிலாளர்களும், 220 தொடர் தற்காலிகத் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 23.05.2022 அன்று நீலகிரி மாவட்டத்திற்குச் சென்றிருந்தபோது, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். முதல்வர் ஸ்டாலின் அந்தக் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாகவும், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தை இலாபம் மற்றும் உறுதித் தன்மையுடன் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்றும் அப்போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்நிறுவனத்தில் நிலவி வரும் கடுமையான நிதி நெருக்கடியிலும், ஊழியர்களின் ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் அனைத்து பணப்பலன்களையும் விடுவிப்பதற்கு தமிழ்நாடு அரசு ஏற்கெனவே ரூ.29.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் 1,093 நபர்கள் பலன் அடைந்துள்ளனர். தற்போது தேயிலை தோட்டக் கழகத்தில் 677 தாயகம் திரும்பிய தொழிலாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளைக் காலி செய்யாமல் உள்ள நிலையில், அவர்களது சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனைத்து தொழிலாளர்களுக்கும் வீடுகளை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள 677 தொழிலாளர் குடும்பங்களுக்கும், சராசரியாக 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், பயனாளிகளின் பங்களிப்பையும் தமிழ்நாடு அரசே ஏற்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு, பணி நிறைவுறும் தருவாயில் உள்ள 573 வீடுகள், தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக ஒதுக்கீடு செய்யப்படும். மேற்படி குடியிருப்புகளின் பயனாளர் பங்களிப்பு தொகையான ரூ.13.46 கோடியை தமிழ்நாடு அரசே ஏற்கும். “தொண்டு செய்வாய் – துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே” என்பதை நெஞ்சில் நிலைநிறுத்தி கலைஞர் வழியில் செயல்பட்டு, தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நடவடிக்கையின் மூலம் ஓய்வு பெற்ற தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.