கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கில் மருத்துவர்களுக்கு முன்ஜாமின் மறுப்பு!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் இருவர் முன்ஜாமின் கோரிய நிலையில், முன்ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17). கால் பந்தாட்ட வீராங்கனையான இவர் ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த 7 ஆம் தேதி மூட்டு வழி பிரச்னை காரணமாக, கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் காலில் கட்டப்பட்ட கட்டு காரணமாக ரத்த ஓட்டம் இல்லாமல், காலில் ரத்த கட்டு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பிரியாவின் வலது கால் துண்டித்து அகற்றப்பட்டது. இந்நிலையில், அவர் நவம்பர் 15 ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதே பிரியாவின் மரணத்திற்கு காரணம் என பல்வேறு தரப்புகள் தெரிவித்தன. மேலும் பிரியாவுக்கு கொளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நேற்று மருத்துவ கல்வி இயக்குனரகம் சென்னை காவல் துறையிடம் ஒப்படைத்த அறிக்கையில் மாணவி பிரியாவின் மரணத்தில் மருத்துவர்களின் தவறு உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் மற்றும் சிலர் மீது ஏற்கனவே 174 என்ற பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இன்று, கவன குறைவாக செயல்பட்டதால் மரணம் விளைவிக்க காரணமாக இருந்ததாக கூறி மருத்துவர்கள் இரண்டு பேர் மீது 304A என்ற பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்கை மாற்றினர். இதையடுத்து இரு மருத்துவர்கள் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று நீதிபதி ஜெததீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவர்கள், ‘அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு அறுவை சிகிச்சை செய்தேன். இருவரும் நன்றாக உள்ளனர். எங்களது குடும்பத்தினரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு விட்டது. சரணவடைதற்கு காவல் நிலையத்திற்கு செல்வதே ஆபத்தாக உள்ளது. நூற்றுக்கணக்கான மிரட்டல் வருகின்றன. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

மருத்துவர்கள் பணியில் கவனக்குறைவாக இருந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘தற்போது தான் சம்பவம் நடந்துள்ளது. விசாரணை நடத்த சிறிது அவகாசம் வழங்க வேண்டும். அறுவை சிகிச்சை முடிந்து, பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு சென்று விட்டேன் என்று எப்படி கூற முடியும்? உங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது. வேண்டுமானால் சரணடையுங்கள்’ என்று தெரிவித்தார். மேலும் மருத்துவர்களின் குடும்பத்தினரை துன்புறுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.