100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என பரவுவது தவறான செய்தி: செந்தில் பாலாஜி

ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என பரவுவது தவறான செய்தி. அதனை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை என, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின் வாரிய அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழை பெய்தாலும் அதை எதிர்கொள்ளக்கூடிய அளவில் மின்சாரம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 44 ஆயிரம் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை உட்பட தமிழகத்தின் எந்த இடத்திலும் மின்சார பாதிப்பு இல்லை.

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான திட்டத்தில் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு ஒரே நாளில் ஆணைகளை முதலமைச்சர் வழங்கி உள்ளார். 100 நாட்களில் ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தொடங்கப்பட்ட திட்டத்தை, 100 நாட்களில் முடிப்பதற்கான வழிமுறைகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மழையால் எங்கே பாதிப்பு ஏற்பட்டாலும் பொது மக்கள் புகார் தெரிவித்தால், உடனடியாக
நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கினார். 36 மணி நேரத்தில் அனைவருக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு உள்ளது. அதற்காக சிறப்பான முறையில் பணியாற்றிய மின்வாரிய ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. சென்னையில் ஏறத்தாழ 16 டிரான்ஸ்பார்ம் மெஷின், உயரம் தூக்கி அமைக்கப்பட்டு உள்ளது. பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மின் இணைப்பு உடன் ஆதார் இணைப்பு என்பது , ஒருவர் ஒரு வீட்டிற்கு ஐந்து மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒவ்வொரு மீட்டருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மின் இணைப்பு, எவ்வளவு பயன்பாடு, உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவே ஆதார் இணைக்கப்படுகிறது. ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என பரவுவது தவறான செய்தி. அதனை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.