பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல்!

கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 61 ஆயிரத்து 218 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாகவே இம்ரான் கான் அரசு கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார். ஆனாலும் பொருளாதார நெருக்கடி பெரும் சிக்கலாகவே இருந்து வருகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு 185 ரூபாய் என்ற அளவுக்கு சரிந்திருக்கிறது.
பாகிஸ்தானில் நிலக்கரி வாங்க அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் கடுமையான மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி முடங்கி உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்ற பிறகு, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு அந்நாட்டின் தலைவர்களை நேரில் சந்தித்து பேசிய ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதற்கு உதவி செய்யும்படி கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.61 ஆயிரத்து 218 கோடி) நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானுக்கான எண்ணெய் நிதியை 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 2.4 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்க பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது. அதனையும் செய்வதாக சவுதி அரேபியா ஒப்புக் கொண்டது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குழுவினர் சவுதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தான் திரும்பி விட்டனர். எனினும் பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் இன்னும் கடன் வாங்கி வருவதற்கான நடைமுறைகளை இறுதி செய்வதற்காக அங்கேயே தங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.