கடவுள் அருள் இருந்தால் மீண்டும் விஜய், அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: எஸ்.ஜே.சூர்யா

கடவுள் அருள் இருந்தால் மீண்டும் விஜய், அஜித்தை வைத்து படம் இயக்குவேன் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தற்போது முழுநேரம் நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகன் மற்றும் முக்கியமான படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

தற்போது புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் ‘வதந்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது இணையத்தொடராக அமேசானில் வெளிவர உள்ளது. இது புஷ்கர் காயத்ரி தயாரிப்பின் 2வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது முதல் தயாரிப்பில் வெளியான சுழல் நல்ல வரவேற்பினைப் பெற்றதைத் தொடர்ந்து இந்த தொடர் மீதும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த இணையத் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் டிசம்பர் 2ஆம் தேதி அமேசானில் நேரடியாக வெளியாக உள்ளது.

இந்நிலையில், இத்தொடரின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்குபெற்று பேசிய எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், “நீ நல்லது செய்தால் உனக்கு நல்லது நடக்கும் என்பார்கள். நான் நடிப்பதற்குத்தான் வந்தேன். தற்போதுதான் அமைந்துள்ளது. நான் உதவி இயக்குநர் மூலமாக இந்த வாய்ப்பைப் பெற்றுக்கொண்டேன். சிறந்த இயக்குநர்கள் உடன் இணையும்போதுதான் ஒருவர் சிறந்த நடிகராக முடியும். இப்போது, என்னை வைத்து இயக்கவே எனக்கு நேரமில்லை. கடவுள் அருள் இருந்தால் நிச்சயம் விஜய், அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவேன்” எனத் தெரிவித்தார்.