இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக்கு தற்போது பெரும் ஆபத்துகள் சூழ்ந்துள்ளது: கி.வீரமணி!

இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக்கு தற்போது பெரும் ஆபத்துகள் சூழ்ந்துள்ளது என்று கி.வீரமணி கூறினார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாளை ஒட்டி திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம், நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் மத்திய அரசால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து குறித்து விளக்கும் பொதுக் கூட்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தாராபுரம் வருகை தந்த திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும் மற்றும் தோழமைக் கட்சியின் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியதாவது:

இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக்கு தற்போது பெரும் ஆபத்துகள் சூழ்ந்துள்ளது. நமது கல்வி உரிமைகள் நீட், புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றால் ஏற்பட்டிருக்க கூடிய ஆபத்தை விளக்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த திராவிடர் கழகம் மற்றும் தோழமைக் கட்சிகளோடு, தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன்.

ஏற்கனவே மோடி 2014ம் ஆண்டு சொன்ன உறுதிமொழி ‘ஓராண்டில் இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்பேன்’ என கூறி பதவிக்கு வந்தார். தற்போது 16 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது தான் வேலைவாய்ப்புக்கு உண்டான திட்டங்களை தொடங்கி இருக்கிறார். வரும் 2024 ம் ஆண்டுக்கு உள்ளாக மீதி உள்ள வேலை வாய்ப்பை அவர் உருவாக்குகிறாரா? என பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் 60 ஆண்டு காலம் செய்யாததை நாங்கள் 6 ஆண்டுகளில் சாதித்து காட்டுவேன் என சொல்லி ஆட்சிக்கு வந்தவர் மோடி. வங்கி கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால் தற்போது வங்கிகளில் மக்கள் செலுத்திய பணம் மக்களுக்கு போய் சேரவில்லை. மாறாக பெரும் நிறுவனங்களுக்குத் தான் 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.
விவசாயிகள் கடனில் வாங்கிய டிராக்டர் பறிமுதல் செய்வதும், விவசாயிகள் இறப்பதும் தற்போது இந்த ஆட்சியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. வங்கிகளில் பணம் இல்லாமல் காணாமல் போய் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம் லட்சுமி விலாஸ் வங்கி.

மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் புதிய மசோதாக்கள் மூலம் புதிய சட்டங்களை கொண்டு வந்நு ஆளுநர் மூலம் போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார். இப்படியாக அரசியல் சட்டத்தை மீறி செயல்படுவதை மக்களிடம் கொண்டு செல்லவே இப்படி ஒரு கூட்டத்தை நடத்துகிறோம். இங்கு பாரதீய ஜனதா கட்சி வளர்ந்தது போல் ஒரு மிகப்பெரிய பிரம்மையை காட்டுகிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியாத அளவு வளர்ந்து விட்டதா? அந்த கட்சி நன்றாக வளர்ந்துள்ளதா? என்பதை கடந்த இரண்டு நாட்களாக அந்த கட்சியின் மாநில தலைவர் கொடுத்திருக்கும் அறிக்கையில் தெரியும்.

யார்.. யாரை நீக்கி இருக்கிறார்கள்? என்னென்ன மாதிரி அவர்கள் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்? அந்த கட்சி எங்கு போய் கொண்டு இருக்கிறது என்பதை பார்த்தாலே தெரிகிறது. இவ்வாறு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.