குட்கா ஊழல்: விஜயபாஸ்கர், ரமணா உட்பட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

குட்கா ஊழல் வழக்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உட்பட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு மாதவராவ் என்ற குட்கா வியாபாரி ரூ250 கோடி வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்கினார். மாதவராவ்-க்கு சொந்தமான சென்னை அருகே செங்குன்றம் பகுதி குடோன்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கிடைத்த ஆவணங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. குட்கா வியாபாரத்துக்காக லஞ்சம் கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களுடனான டைரி ஒன்றும் வருமான வரித்துறையிடம் சிக்கியது. மொத்தம் ரூ39.91 கோடி லஞ்சமாக மட்டும் கொடுக்கப்பட்டதாக அதில் எழுதப்பட்டிருந்தது. இந்த லஞ்ச விவகாரம் 2017-ம் ஆண்டு ஊடகங்களில் வெளியாகி பெரும் புயலை கிளப்பியது. தமிழக சட்டசபையிலும் அப்போதைய எதிர்க்கட்சியான திமுக இதனை கிளப்பியது. குட்கா வழக்கில் அதிமுக ஆட்சிக்கால அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா லஞ்சம் பெற்றனர் என்பதுதான் குற்றச்சாட்டு.

பின்னர் குட்கா வழக்கை சிபிஐ விசாரித்து 2018-ம் ஆண்டு முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா தொடர்பாக விசாரிக்க அனுமதி கோரியது. இதனடிப்படையில் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை தமிழக அரசு அனுமதியும் அளித்தது. இந்த நிலையில் விஜயபாஸ்கர், ரமணா மற்றும் மாஜி போலீஸ் அதிகாரிகள் ஜார்ஜ், டிகே ராஜேந்திரன் உட்பட மொத்தம் 21 பேருக்கு எதிராக சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.