தமிழர்களை தலை நிமிர செய்தது திராவிட இயக்கம் தான்: கனிமொழி

பாளை நேருஜி கலையரங்கில் நடைபெற்று வரும் பொருநை இலக்கியத் திருவிழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று கனிமொழி எம்.பி. கூறினார். நெல்லை:

தமிழக அரசு சார்பில் பொருநை இலக்கிய திருவிழா பாளையில் நேற்று தொடங்கியது. பாளை நேருஜி கலையரங்கில் நடைபெற்று வரும் பொருநை இலக்கியத் திருவிழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அவர் மாணவ, மாணவிகள் எழுதிய தபால் கவிதை தொகுப்பினை கலெக்டர் விஷ்ணு, பொது நூலக இயக்ககத்தின் இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) இளம்பகவத், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் பவா.செல்லத்துரை, எழுத்தாளர் கலாப்பிரியா ஆகியோரிடம் வழங்கினார். விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

தமிழகத்தில் இலக்கிய செழுமைமிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவேரி, சிறுவாணி மற்றும் பொருநை என 5 மண்டலங்களில் இலக்கியத் திருவிழாக்களை சிறப்பாக நடத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் பொருநை இலக்கிய திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு எளிதாக புத்தகம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, மாணவ-மாணவிகள் புத்தகம் வாசிப்பதன் மூலம் தன்னுடைய அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள முடியும். புத்தகம் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் தமிழ் இலக்கியங்களை எளிதாக அறிய முடியும். இந்த பொருநை இலக்கிய திருவிழா மிக முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

பேரறிஞர் அண்ணா, புத்தகம் வாசிப்பதை மிகவும் ஆர்வம் கொண்டு இறுதி மூச்சு வரை புத்தகத்தை நேசித்தவர் கலைஞர். எனவே புத்தகம் வாசிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள் தான் திராவிட இயக்கத்தின் தலைவர்கள். திராவிட இயக்கம் தான் தமிழர்களை தலை நிமிர செய்தது. பள்ளியில் எது சரி, எது தவறு என்று சொல்லி தரக்கூடிய பல நேரங்களில் புத்தங்கள் நமக்கு கைக்கொடுக்கிறது. புத்தகங்கள் படிக்க, படிக்க உங்கள் சிந்தனைகள் விரிவாகும். புத்தகங்கள் தரும் உலகம் என்பது நம்முள் பல கேள்விகளை பல கருத்துக்களை முன் வைக்கும். புத்தகத்தை படித்து படித்து சிந்திக்கும் தலைவன் தான் நம்மை அழைத்துச் செல்லும் தலைவனாக இருக்க முடியும். அத்தகைய தலைவர்கள் தான் திராவிட இயக்க தலைவர்கள். இன்று தமிழகத்தில் ஜாதி மதம் என்ற பெயரால் யாரும் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது என்றால் அதற்கு திராவிட இயக்க எழுத்தாளர்கள் தான் காரணம். எனவே, பொதுமக்கள், இளம் தலைமுறையினர், மாணவ, மாணவியர்கள் அனைவரும் பொருநை இலக்கிய திருவிழாவிற்கு வந்து ஓலைச் சுவடி வடிவிலான இலக்கியங்கள், மூல புத்தக மற்றும் நாட்டு புறக் கலைகள் தொடர்புடைய பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.