இந்தியாவில் கொரோனா பூஜ்ய நிலையை நோக்கி செல்கிறது; சீனாவில் நிலவுவது போன்ற நிலை இந்தியாவில் கிடையாது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் மருத்துவ முகாமை தொடக்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா கட்டாய பரிசோதனைக்கு விரைவில் தளர்வு அளிக்கப்படும். அறுவை சிகிச்சை செய்யப்படுவோருக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படும். வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமானப் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு இருந்தாலும், இந்தியாவில் பூஜ்ஜிய நிலையை நோக்கி செல்கிறது. சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைகளுக்கு காப்பீட்டு பணம் சென்று சேர்வதில் சிக்கல் இல்லை. அனைத்து மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.