அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மின் தடை இருக்காது: பிரேமலதா

”அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மின் தடை இருக்காது” என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.

கரூரில் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மின்சார துறை போக்குவரத்து துறையில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே மின் வெட்டு வந்து விடும் என்பது தமிழக மக்களின் கருத்தாக உள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு உள்ளது என கூறினால் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்ற மாநிலங்களை உதாரணமாக கூறுகிறார். அவர் தமிழகத்துக்கு மட்டும் தான் மின்துறை அமைச்சர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சென்னையில் எங்கள் வீட்டிலும் மின் தடை உள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வேண்டுமானால் மின் தடை இருக்காது. அவருக்காக மின்துறை அதிகாரிகள் ‘ஸ்பெஷலாக’ எதையாவது செய்து வைத்திருப்பர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை மின் தடை உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவ நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தே.மு.தி.க. வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.