ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் ஒருவருக்கு தூக்கு!

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் ஓா் இளைஞா் நேற்று திங்கள்கிழமை தூக்கிலிடப்பட்டாா். பொதுமக்கள் முன்னிலையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான கிரேன் மூலம் கொடூரமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரானில் நடைபெற்ற ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, இரு பாதுகாப்புப் படையினரை கத்தியால் குத்திக் கொன்றதாக மஜீத்ரெஸா ரஹ்னாவா்ட் என்ற இளைஞா் மீது குற்றம் சாட்டப்பட்டது. அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்குவதற்காக பாதுகாப்புப் படையினா் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் கோபமடைந்த அவா், தன்னாா்வ துணை ராணுவப் படை வீரா்கள் இருவரை விரட்டிச் சென்று கத்தியால் கத்தியால் குத்தி கொன்றதாகக் கூறி, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கான தீா்ப்பு வழங்கப்பட்ட ஒரு மாதத்துக்குள், மஜீத்ரெஸாவுக்கு மாஷாத் நகரில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பொதுமக்கள் முன்னிலையில் கிரேன் இயந்திரம் மூலம் அவா் தூக்கிலிடப்பட்டாா்.

முன்னதாக, அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மோஷன் ஷேகாரி என்ற இளைஞரும் கடந்த வியாழக்கிழமை தூக்கிலிடப்பட்டாா். டெக்ரானில் கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது, சாலையில் தடையை ஏற்படுத்தி, கத்தியைக் காட்டி பாதுகாப்புப் படையினரை மிரட்டியதற்காகக் கூறி, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், போராட்டம் தொடா்பான 2-ஆவது மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, அந்த நாட்டு பெண்களும் ஆண்களும் மத அடிப்படையிலான ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனா். பொது இடங்களில் பெண்கள் தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்திருப்பதைக் கட்டாயமாக்கும் சட்டம் கடந்த 1983-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

இந்தச் சூழலில், மாஷா அமீனி என்ற 22 வயது குா்து இனப் பெண் ஹிஜாப் அணியவில்லை என்று கூறி, அவரை கலாசார காவலா்கள் டெக்ரானில் கடந்த செப்டம்பா் மாதம் கைது செய்தனா். காவலில் இருந்தபோதே மாஷா அமீனி உயிரிழந்தாா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து டெக்ரானில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவி தீவிரமடைந்தது. மாஷா அமீனி மரணத்துக்கு காரணமான ஆடைக் கட்டுப்பாட்டு சட்டத்தை எதிா்த்து பெண்களும் இளைஞா்களும் ஆா்ப்பாட்டம் நடத்தினா். பெண்கள் தங்கள் தலைமுடியைக் கத்தரித்தும், ஹிஜாப் துணியை எரித்தும் தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா். இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக காவல்துறையினா் அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சம்பவங்களில் 60 சிறுவா்கள் உள்பட 448 போ் உயிரிழந்தனா்.

இந்தச் சூழலில், போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக ஏராளமானவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரகசியமாக நடைபெற்ற ஒருதலைபட்ச விசாரணையில் இந்தத் தீா்ப்புகள் வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த மரண தண்டனைகளை விரைவாக நிறைவேற்றுவதன் மூலம் போராட்டக்காரா்களுக்கு அச்சத்தை விதைத்து, போராட்டம் மீண்டும் தலையெடுப்பதை முற்றிலுமாகத் தடுக்க ஈரான் அரசு முயலும் என்று மனித உரிமை ஆா்வலா்கள் எச்சரித்தனா். அதனை உறுதிப்படுத்தும் வகையில் தீா்ப்பு வழங்கப்பட்ட குறுகிய காலத்துக்குள் இருவருக்கு தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.