பில்கிஸ் பானு வழக்கிலிருந்து விலகிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரின் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலிருந்து நீதிபதி பெலா எம்.திரிவேதி தாமாக விலகியுள்ளார். வழக்கிலிருந்து அவர் விலகுவதற்கான காரணத்தை உச்சநீதிமன்ற அமர்வு குறிப்பிடவில்லை.

கோத்ரா ரயில் எரிப்பைத் தொடா்ந்து நிகழ்ந்த குஜாரத் வன்முறை சம்பவத்தின்போது, பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அவரது குடும்ப உறுப்பினா்கள் 7 பேரும் கொலை செய்யப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவா்கள் அனைவரையும் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுவித்தது. கடந்த 1992-ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், அவா்கள் விடுவிக்கப்பட்டதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தண்டனைக் காலம் முடியும் முன்பாக குற்றவாளிகள் 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்தது தொடா்பான குஜராத் மாநில அரசின் முடிவுக்கு எதிராக பில்கிஸ் பானு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் பெலா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வுக்குமுன் செவ்வாய்க்கிழமை இன்று விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து நீதிபதி பெலா எம்.திரிவேதி விலகியுள்ளார். பில்கிஸ் பானு வழக்கை இன்று விசாரித்த நீதிபதி அஜய் ரஸ்தோகி, திரிவேதி இந்த வழக்கில் ஆஜராக விரும்பவில்லை எனக் குறிப்பிட்டார். மேலும், அவர் விலகுவதற்கான காரணத்தையும் நீதிமன்ற அமர்வு குறிப்பிடவில்லை.