வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க கேரள சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்!

ஆளுநரை பல்கலைக் கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வகை செய்யும், பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா இன்று கேரளா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேரளாவில் அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் பதவிகளில் அரசு நியமிப்பவர்களுக்கு கவர்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுதான் இதற்கு காரணம். இதையடுத்து, துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, இரு மாதங்களுக்கு முன் கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த மசோதாவில் இதுவரை ஆளுநர் ஆரிப் கையெழுத்து போடவில்லை. இதையடுத்து ஆளுநரை பல்கலைக் கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்க அவசர சட்டம் கொண்டு வர அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆளுநரை பல்கலைக் கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வகை செய்யும், பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தின்கீழ், கேரளாவில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக பதவி வகிக்கும் ஆளுநரை மாற்றி, சிறந்த கல்வியாளர்களை உயர் பதவியில் நியமிக்கலாம்.