மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1,200 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1,200 ஏக்கர் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்ட நிலையில், அந்த நிலங்களை மீட்க அறநிலையத் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை விமான நிலையத்திற்கு அருகே ஆதீன மடத்திற்கு சொந்தமாக 1,191 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை மறைந்த 292 வது ஆதீனமான மதுரை ஆதீனமான அருணாகிரி ரூ.5 லட்சத்துக்கு குத்தகைக்கு விட ஒப்பந்தம் போட்டுள்ளார். புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் குத்தகைக்கு விட முன்னாள் மதுரை ஆதீனம் ஒப்பந்தம் செய்த நிலையில் அதனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. சென்னை திருத்தொண்டர் சபையின் நிறுவனரான ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு இருந்ததாவது:-

மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான , பிரசித்திபெற்ற மடமாக இருந்து வருகிறது. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும். இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரி, மதுரை விமான நிலையம் அருகே உள்ள, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் இருக்கும் 1191 ஏக்கர் நிலத்தை புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் 99 வருடம் குத்தகைக்கு (பவர் ஒப்பந்தம்) விட்டுள்ளார். இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டம் உள்ளது. நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன. இந்த நிலையில் ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தற்போதைய 293 வது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில் வழக்கறிஞர் அருன் சாமிநாதன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மறைந்த 292 வது ஆதீனம் இருந்தபோது இந்த ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கின்றனர். அவர்கள் பண பலம் மிக்கவர்களாக உள்ளனர். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினர். அதில், மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.