அதிமுக தொண்டர்களின் பாவம் உங்களை சும்மா விடாது: எஸ்.பி.வேலுமணி

அதிமுக தொண்டர்களின் பாவம் உங்களை சும்மா விடாது என்று திமுக அரசு மீது ஒரு சாபத்தையும் விட்டுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கோவை மாவட்ட அதிமுக சார்பில் ஜனவரி 3, 5 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வேலுமணி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது வேலுமணி பேசியதாவது:-

இந்த ஒன்றரை வருஷத்தில், உதயநிதியை அமைச்சராக்கியது தான் திமுக ஆட்சியின் சாதனை. ஸ்டாலின் எதை செய்ய மாட்டேன் என்றாரோ, அதைத்தான் செய்வார். கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிசாமி மதுக்கடைகளை மூடினார். ஆனால், கொரோனா காலத்தில் ஸ்டாலின் மதுக்கடைகளை திறந்து வைத்தார்.. என்னுடைய மகன், மருமகன் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றார் ஸ்டாலின். படிப்படியாக கொண்டு வந்து உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்துவிட்டனர்.

காங்கிரஸ் கட்சியில் மிட்டா மிராசுகள் இருந்ததால், அண்ணா திமுகவை ஆரம்பித்தார். ஆனால், காங்கிரசை விட திமுக மோசமாக இருக்கிறதே. திமுகவை குடும்ப சொத்தாக மாற்றிவிட்டார்கள். கருணாநிதி கூட ஸ்டாலினுக்கு இறுதிவரை பதவி கொடுக்காமல் வைத்திருந்தார். ஆனால், உதயநிதி ஸ்டாலினுக்கு வேகமாக பதவி கொடுக்கிறார்கள். ஸ்டாலினுக்காகத்தான், அன்று வைகோவை கட்சியில் இருந்தே நீக்கினார்கள். ஆனால் வைகோ இப்போது எதுவுமே பேசவில்லை. வாய் திறக்கவில்லை.

திமுக கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சனைகள் எதுக்குமே குரல் கொடுப்பதில்லை. திமுக எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. ஏன்தான் இந்த திமுகவிற்கு வாக்களித்தோம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஊடகங்கள் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்த வரலாறை போடுகிறார்கள். இதெல்லாம் நியாயமா? ஊடகங்கள் கைவிட்டால் திமுக ஆட்சி போய்விடும். எதுவும் செய்யாத ஒரே முதல்வர் ஸ்டாலின் தான். ஆனால், அதிக வருடங்கள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. திமுகவின் ஒரே நோக்கம் கொள்ளையடிப்பது மட்டுமே. அதிமுக ஆட்சியில் நடந்த போராட்டங்களில் பாதி கூட, திமுக ஆட்சியில் நடப்பதில்லை.

எந்த கொம்பனும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. மறுபடியும் அதிமுக ஆட்சிக்கு வரும். இந்த கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் நல்லாவே இருக்க முடியாது. திமுக ஐடி விங்க் அதிமுக தலைவர்களை, எம்எல்ஏக்களை டேமேஜ் செய்து கொண்டிருக்கிறார்கள். சிங்காநல்லூர் எம்எல்ஏ, கேஆர் ஜெயராமன் திமுகவிற்கு செல்வதாக திமுக ஐடி விங்க் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இந்த கட்சியில் இருந்து அனுபவித்து விட்டு சென்றால், அதிமுக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் தொண்டர்களின் பாவம் உங்களை சும்மா விடாது. திமுகவை நம்பி செல்வது, தற்கொலை செய்து கொள்வது போல தான். இவ்வாறு வேலுமணி கூறினார்.