பேனா நினைவு சின்னம்: மத்திய, மாநில அரசு, சென்னை மாநகராட்சிக்கு பதிலளிக்க உத்தரவு!

சென்னை மெரினாவில் கடலுக்குள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக 42 மீட்டர் உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடைகோரிய வழக்கில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகாராட்சி பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்கள் அமைந்துள்ளன. மெரினா கடற்கரைக்கு செல்லும் தமிழ்நாட்டினர் உள்பட வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த நினைவிடத்தை பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் தான் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மெரினா கடலில் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை மெரினா கடலில் 8,551.13 சதுர மீட்டரில் 42 மீட்டர் உயரத்துக்கு கலைஞர் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க தடை கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம் குமார் ஆதித்தன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‛சென்னை நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடற்கரை பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட கடற்கரை பகுதியாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகளில் தான் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கட்டுமானம் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளம் பாதிக்க வாய்ப்புள்ளது. மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் 42 மீட்டர் உயரத்தில் பேனா நினைவிடம் அமைக்க தடை விதிக்க வேண்டும். மேலும் கடலோர ஒழுங்குமுறை விதிகளின்படி நிபுணர் குழுவை அமைத்து விதிகளுக்கு புறம்பாக கடலோர பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும். மேலும் மெரினா கடற்கரையில் வரும் நாட்களில் யாருடைய உடலையும் அடக்கம் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும். அதோடு மெரினா கடற்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தென்மண்டல பசுமை தீர்பாயத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது தீர்ப்பாயத்தின் அமர்வு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை 8 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும் வழக்கின் விசாரணையானது 2023ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.