பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுக துடியாக துடிக்கிறது: ஜெயக்குமார்

பாஜகவுடன் கூட்டணி வைக்க துடியாக துடிக்கின்ற கட்சி தான் திமுக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.க்கு எதிராக அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம், ‘நாடாளுமன்ற தேர்தலில் திமுக-பாஜக கூட்டணி வரப்போகிறது என்றார். விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கழற்றி விடப்போகிறது. திமுகவிடம் ஒன்று எங்களுடன் கூட்டணி வையுங்கள் அல்லது காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் கழற்றி விடுங்கள் என்று பாஜக கூறுகிறது’ என்றார்.

அதிமுக எம்.பி. சி.வி. சண்முகத்தின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நான் கமலாலயம் (தமிழ்நாடு பாஜக கட்சி தலைமை அலுவலகம்) விட்டு வந்து 4 நாட்கள் ஆகிறது. வாரணாசி சென்றுவிட்டு கோவை வந்துள்ளேன். அவர் சொல்வதற்கு (சிவி சண்முகம்) தான் பதில். சிவி சண்முகம் பாஜகவில் சேர்ந்தாரா? என்று தெரியவில்லை. நான் இன்னும் சென்னை போகவில்லை. இப்போது எந்த கட்சி, எந்த கட்சியோடு கூட்டணி வைக்கும் என்று அந்தந்த கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் பேசினார்கள் என்றால் அதில் ஒரு தன்மை இருக்கிறது. இப்போது யாரோ ஒரு 3-ம் கட்ட தலைவர்கள் இல்லை அது கூட்டணி வைக்கிறார்கள் என்றால் அவர்கள் பாஜகவில் சேர்ந்திருக்க வேண்டும்.. அல்லது திமுகவில் சேர்ந்திருக்க வேண்டும்.. அப்படி இருந்தால் நான் பதில் சொல்கிறேன். யூகங்களுக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும். நான் சென்னைக்கு சென்று 4 நாட்கள் ஆகுகிறது. சிவி சண்முகம் பாஜகவில் சேர்ந்திருக்கிறாரா? என்று இப்போது போன் செய்து கேட்கிறேன். ஏனென்றால் பாஜக சார்பில் யாரேனும் எதாவது கருத்து சொல்கிறார்கள் என்றால் அவர்கள் பாஜகவில் சேர்ந்திருக்க வேண்டும். அதனால் நான் அதை பின் தொடரவில்லை. சேர்ந்துவிட்டாரா? என்று கேட்டு சொல்கிறேன். இன்றைய தேதியில் தமிழ்நாடு பாஜக கட்சி எப்படி வளர்ந்துகொண்டிருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். .மறுபடியும் அதை நான் உறுதியாக கூறுகின்றேன். பாஜக இங்கு (தமிழ்நாடு) அரசியலில் இருப்பது தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதற்கு தான் எங்கள் கட்சியை நடத்துகிறோம். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை போல நாமும் அப்படியே உயிர் வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்பது எங்கள் எண்ணம் கிடையாது. சரியான நேரம் காலம் வரும்போது பேசுவோம்’ என்றார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தேர்தல் இன்னும் ஓராண்டில் நெருங்கும் நிலையில் காங்கிரசை கழற்றி விட்டுவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க துடியாக துடிக்கின்ற ஒரு கட்சி தான் திமுக. எனவே தான் அதை கண்கூடாக பார்த்து தான் சிவி சண்முகமே கூறியுள்ளார். அப்படி வந்து உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று அந்த உறவு வைத்துக்கொள்வதில் திமுக போன்று ஒரு சந்தர்ப்பவாத பச்சோந்தி அரசியல் வேறு எந்த கட்சியும் செய்யாது. அதை திமுக மட்டும் தான் செய்யும்’ என்றார்.