பரந்தூர் விமான நிலைய அனைத்து பணிகளும் மாநில அரசு வசம் உள்ளதாக மத்திய அரசு பதில்!

பசுமை விமான நிலைய கொள்கையின்படி பரந்தூர் விமான நிலையம் அமைக்கக்கூடிய அனைத்து பணிகளும், குறிப்பாக நிலம் கையக்கப்படுத்தல், மறுவாழ்வு, இழப்பீடு நிதி ஒதுக்குதல் ஆகியவை மாநில அரசு வசமே உள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையமாக பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகளால் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4,563 ஏக்கர் நிலப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. சிங்கிலி பாடி, மாடபுரம், பரந்தூர், கொளத்தூர், நெல்வாய், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் இந்த விமான நிலையம் அமைக்க நிலங்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் 3,646 ஏக்கர் தனியார் நிலமும், 1,542 ஏக்கர் அரசு நிலமும் அடங்கும். இதில், 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்படவிருக்கின்றன. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 145 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

இதனிடையே மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ சென்னை பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதா? பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக பொதுமக்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துள்ளதா? மத்திய அரசு மக்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதா? எனவும் அவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை அதிகரிக்கவும் திட்டங்கள் உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே சிங், மத்திய அரசு நாடு முழுவதும் பசுமை விமான நிலையங்களை அமைக்க முடிவு செய்தது. அதன்படி, பசுமை விமான நிலைய 2008 கொள்கையின் படி அதற்கான ஒப்புதலும் வழங்கி வருகிறது. விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு இரண்டு ஒப்புதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், ஒன்று சைட் கிளியரன்ஸ் மற்றொன்று கொள்கை ஒப்புதல் ஆகும். தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் 2022 ஆகஸ்ட் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்ட அனுமதி சைட் கிளியரன்ஸ் வழங்க கோரி மத்திய அரசிடம் விண்ணப்பம் வழங்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், 2008 பசுமை விமான நிலைய கொள்கையின்படி விமான நிலையம் அமைக்கக்கூடிய அனைத்து பணிகளும், குறிப்பாக நிலம் கையக்கப்படுத்தல், மறுவாழ்வு, இழப்பீடு நிதி ஒதுக்குதல் ஆகியவை மாநில அரசு வசமே உள்ளது என விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே பரந்தூர் விமான நிலையம் அமைத்தால் சென்னை அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அடையாறு வடிகால் பகுதியில்தான் விமான நிலைய கட்டுமானப்பணிகள் அமைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.