அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு!

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேர்தல் பல்வேறு காரணங்களால் ஏற்கனவே ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களில் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆறு பேர், அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆறு பேர் என சம பலத்தில் உள்ளனர். இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அதிமுக தரப்பில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.வி.க தேர்தலை முறையாக நடத்த கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்தலை முறையாக நடத்தவும், தேர்தல் அதிகாரி சீல் இடப்பட்ட கவரில் முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், கோர்ட் உத்தரவிடும் வரை முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி, கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.

முன்னதாக, கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரில் அதிமுக உறுப்பினர்கள் ஆறு பேர் வந்து கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் முன்னாள் அமைச்சர் காரை தடுத்து நிறுத்தி, கண்ணாடியை உடைத்து அதிமுகவை சேர்ந்த திருவிக என்பவர் கடத்தப்பட்டார். பின்னர் அவர் மீட்கப்பட்டு நேற்று மாலை 6:30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் கல்வார்பட்டி காவல் நிலைய சோதனைச் சாவடியில் அதிமுகவினர் வசம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனிடையே, அதிமுக நிர்வாகி கடத்தல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடைபெறும் சமயத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் நூற்றுக்கணக்கானோர் ஒரே சமயத்தில் ஒன்று கூடியதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி.சுந்தரவதனம் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி நடந்தது. திமுகவை சேர்ந்த ஆறு பேர், அதிமுகவை சேர்ந்த ஐந்து பேர் பங்கு பெற்று வாக்களித்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இன்றி கூட்டம் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தாந்தோணிமலை போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.