பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது கவலை அளிக்கிறது: வேலுமணி!

கோவையில் ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்டு, வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொந்தளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார். நேற்று கூட தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்டாட்சியா எனச் சீறி இருந்தார் ஈபிஎஸ். கோவையில் செயல்பட்டு வரும் நல்லறம் அறக்கட்டளையின் ஆம்புலஸ் டிரைவராக பணியாற்றி வரும் ஒருவர், நேற்று அதிகாலை கழிவறைக்குச் சென்றபோது, சில மர்ம நபர்கள் அவரை மிரட்டி, கடுமையாகத் தாக்கி அவரிடம் இருந்த செல்போன்கள், பணம் ஆகியவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

கோவை நல்லறம் அறக்கட்டளையின் 24 மணி நேர இலவச ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர், நேற்று அதிகாலை கழிவறைக்கு செல்லும்போது, சில மர்ம நபர்கள் அவரை மிரட்டி, தாக்கி, அவரிடம் இருந்த இரண்டு செல்போன்கள் மற்றும் பணம் உள்ளிட்டவைகளை பறித்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பேரூர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும், புகாரை ஏற்காமல் காவல்துறையினர் அலைக்கழித்து வருகின்றனர்.

இது போன்று கொள்ளை சம்பவங்களும், வழிப்பறி சம்பவங்களும் கோவை மாநகர் முழுவதும் அதிகம் நடைபெற்று வருவதும், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதும் கவலை அளிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இலவச ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொதுமக்களுக்கு காலம் தவறாமல் வழங்கி வரும் நல்லறம் அறக்கட்டளையின் ஓட்டுநரை தாக்கி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில், ஓட்டுநரின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொள்ளையர்களை உடனடியாக கைது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோவை மாநகர காவல்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.