வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்: ராமதாஸ்

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு உடனே பரிசோதனைகளை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் ஜப்பானில் 1.85 லட்சம், கொரியாவில் 87,559, பிரான்சில் 71,212, ஜெர்மனியில் 52,528 உட்பட உலகம் முழுவதும் 5,59,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா புதிய அலை கவலையளிக்கிறது

கடந்த காலங்களில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. அதனால் புதிய அலை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பரவுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை. முதல் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட வேண்டும்!
தமிழகத்தில் 18 வயதைக் கடந்த 4.30 கோடி பேரில் 87 லட்சம், அதாவது 20.23% மட்டுமே பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்றரை கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் போட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். அவற்றை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும்!

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். பொதுமக்களும் தங்கள் பங்குக்கு கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் கொரோனா பரவலையும், அதன் ஆபத்தான விளைவுகளையும் தடுத்து நிறுத்த ஒத்துழைக்க வேண்டும்! இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் உலக நாடுகளும் உஷார் நிலைக்கு திரும்பி உள்ளன. நமது மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளுக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் விடுத்துள்ளது. டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் அதிகாரிகள், வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் கடைபிடிக்க மத்திய அரசு அனைத்து தரப்புக்கும் அறிவுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் கொரோனா தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகளையும் மத்திய அரசு முடுக்கிவிட்டிருக்கிறது.