அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இன்று சந்திக்கிறார் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி!

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி இன்று நேரில் சந்தித்து பேசவுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓராண்டை நெருங்கி வருகிறது. உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக போரிட்டு வரும் நிலையில் உக்ரைனும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ரஷியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் தங்களால் இணைத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டும், அந்த நாட்டுப் படையினரின் வசம் இன்னும் இருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதில் கடும் சிக்கல் நிலவி வருவதாக ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதின் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளாா்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று(புதன்கிழமை) வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்து பேசவுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுடனான போருக்குப் பின்னர் ஸெலென்ஸ்கி முதல்முறையாக அமெரிக்கா செல்லவுள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் குறித்தும் அடுத்து எடுக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கிய நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் ரஷ்யா போரிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருகின்றன.