ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை: ரிஷி சுனக் வருத்தம்!

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உருக்கமான கருத்தினை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள தலீபான் அமைப்பினர், பெண்களுக்கான சுதந்திரத்தை மெல்ல மெல்ல பறித்து வருகிறார்கள். இப்போது அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர்ந்து படிக்க தடை விதித்துள்ளனர். இது அங்குள்ள மாணவிகளை கண்ணீரில் தள்ளி உள்ளது. அதுமட்டுமின்றி இது உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், டுவிட்டரில் உருக்கமான கருத்தினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மகள்களுக்கு தந்தை என்ற நிலையில், அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிற ஒரு உலகத்தை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு வழங்குவதற்கு என நிறைய இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு அனுமதி மறுப்பது என்பது மிகக்கொடிய பின்னடைவு ஆகும். இதை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. தலீபான்களை, அவர்களின் செயல்களின் அடிப்படையில் நாம் தீர்மானிப்போம் என்று அதில் ரிஷி சுனக் கூறி உள்ளார்.