தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை: மா.சுப்ரமணியன்

தமிழகத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. சீனாவிலும், ஜப்பானிலும் தினசரியும் லட்சக்கணக்கான மக்கள் இன்றைக்கும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா பரவல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் இந்த பாதிப்பு உச்சத்தை அடைந்து தினசரி 37 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மார்ச் மாதம் வரும்போது, சீனாவில் தினசரி 42 லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்படுவார்கள். உலகம் இதுவரை சந்திக்காத பேரழிவுகளை சீனா சந்திக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவைப் போலவே, தென் கொரியாவிலும் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 75,744 பேர் பிஎப்7 வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேரில் ஒருவர் பிஎப்7 வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கொரியா நோய் கட்டுப்பாடு நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் மொத்த பாதிப்பு எண்ணிகை 10 கோடியை தாண்டியுள்ளது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளிடம் மாநில அரசு வலியுறுத்தியது. இந்த நிலையில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா இதுவரை இல்லை. கொரோனா குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம், மக்களை பாதுகாக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-

வெளிநாட்டு பயணிகளுக்கு தமிழக விமான நிலையங்களில் நாளை முதல் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தி உள்ளதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. தமிழகத்தில் ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா பாதிப்பு உள்ளது. ஆறு மாதங்களாக கொரோனாவுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜப்பான், தற்போது ஜப்பான், சீனா,தென் கொரியா, ஹாங்காங் நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அறிவுறுத்தலின்படி இந்த நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு நாளை முதல் பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.