திண்டுக்கல் மாவட்டம் திமுகவின் கோட்டை: உதயநிதி ஸ்டாலின்!

திண்டுக்கல் மாவட்டம் திமுகவின் கோட்டை என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறி குறைகளை கேட்டறிந்தார். பின்பு பள்ளியில் உள்ள மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளுக்கு சென்று சுகாதாரமாக உள்ளதா? என்று ஆய்வு செய்து கல்வித்துறை அதிகாரிகளிடம் திட்டங்கள் பற்றி கேட்டறிந்தார். இதனையடுத்து மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

திண்டுக்கல் திமுகவின் கோட்டை என்பதை உறுதியாக சொல்வேன். சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் நான் எப்போது பிரச்சாரம் செய்ய வந்தாலும் என்னை அமோகமாக வரவேற்கும் மாவட்டம் தான் திண்டுக்கல். அதுபோக வெற்றியையும் வழங்கியுள்ள மாவட்டம். இங்கு இரண்டு அமைச்சர்களை கொடுத்துள்ளார் தலைவர். நான் திண்டுக்கல்லுக்கு கடைக்கோடி உறுப்பினராகவும் வருகை தந்திருக்கிறேன். இளைஞரணி செயலாளராகவும் வருகை தந்திருக்கிறேன். இப்போது முதன்முதலாக சட்ட மன்ற உறுப்பினராகவும் இன்னும் சிறப்பாக அமைச்சராக இங்கு வந்துள்ளேன். இவ்வாறு அமைச்சர் உதயநிதி கூறினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தினை ஆய்வு செய்தார். மேலும் அங்கு விளையாட்டு வீராங்கணைகளுக்கான தங்கும் விடுதியினை ஆய்வு செய்து அங்கு உள்ள மாணவிகளின் தங்கும் விடுதி அறைகள் உபயோகிக்கும் கழிவறைகளை ஆய்வு செய்து அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் சேர்ந்து விளையாட்டு வீராங்கனைகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் உடன் இருந்தனர்.