மக்களவை குளிர்கால கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது!

மக்களவை குளிர்கால கூட்டத் தொடர் முன்கூட்டியே நிறைவடைந்துள்ளது. தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. டிசம்பர் 29ஆம் தேதியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திட்டமிட்டதற்கு நான்கு நாள்களுக்கு முன்னதாகவே மக்களவை அலுவல்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு முன்கூட்டியே நிறைவு செய்யுமாறு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்தவகையில் முன் கூட்டியே பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 23ம் தேதி முடிக்க மக்களவையில் வணிக ஆலோசனைக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உறுப்பினர்கள் கோரிக்கை மற்றும் அமளி காரணமாக கூட்டத் தொடரை நான்கு நாள்களுக்கு முன்னதாக நிறைவு செய்வதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். எனவே தேதி குறிப்பிடப்படாமல் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் மூன்றாவது வாரத்திலேயே தொடங்கி குறைந்தது 20 நாட்கள் நடைபெறும். ஆனால், சில நேரங்களில் டிசம்பர் மாதம் குளிர்கால கூட்டத் தொடர் நடந்துள்ளது. 2017, 2018 ஆம் ஆண்டுகளில் குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பரில் நடைபெற்றது. இந்த ஆண்டு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கியது. வரும் 29ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த குளிர்கால கூட்டத் தொடரில் 17 அமர்வுகளில் 16 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.