தெலங்கானா எம்எல்ஏக்களை பேரம் பேசிய வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

தெலங்கானா எம்எல்ஏக்களை பேரம் பேசிய வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்களில், தற்போதைக்கு முதன்மையில் இருப்பவர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். பாஜகவை வங்க கடலில் தூக்கி எறிய வேண்டும் என்று குரல் கொடுத்தவர் கேசிஆர். இப்படி ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார் சந்திர சேகர ராவ். அதன்படி கொரோனா காலத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு பிரதமர் மோடி வந்தபோதும் அவரை வரவேற்க முதல்வர் கேசிஆர் செல்லவில்லை. சமத்துவத்துக்கான சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தபோது, அந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் முதல்வர் கேசிஆர் தவிர்த்துவிட்டார். அதேபோல் ஐசிஆர்எஸ்ஏடி-யின் 50வது ஆண்டுவிழாவுக்கும் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் செல்லவில்லை. பாஜகவின் செயற்குழுக் கூட்டம் தெலங்கானாவில் நடந்தபோதெல்லாம், அங்கு பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர் கே.சிஆர் செல்லவில்லை.

பாஜக ஆளாத மாநில முதல்வர்களை சந்திப்பது, மூன்றாவது கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை என கேசிஆர் தொடர்ந்து பாஜகவிற்கு எதிரான தீவிர அரசியல் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு எதிராக மாநில அரசுகள் வலுவடைய வேண்டும் எனும் வாதத்தை முன்வைத்து, தன்னுடைய தெலங்கான ராஷ்டிரிய சமிதி கட்சியினை பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றி தேசிய அரசியலில் முதன்மைதுவம் பெறும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்தநிலையில் கேசிஆரின் பாரதீய ராஷ்டிரிய சமிதி (BRS) எம்எல்ஏக்களை பாஜகவினர் பேரம் பேசி வாங்க முயன்றதாக, ஆதாரங்களை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தெலங்கானா அரசின் எம்எல்ஏக்களிடம் பாஜகவினர் பேரம் பேசியதாக, பாஜக மூத்த தலைவருக்கு சிறப்பு விசாரணை குழு சம்மன் அனுப்பியது. பாரத ராஷ்டிர சமிதியின் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), நவம்பர் 21ஆம் தேதிக்குள் காவல்துறையில் ஆஜராகுமாறு பாஜக பொதுச் செயலாளர் பிஎல் சந்தோஷுக்கு சம்மன் அனுப்பியது. குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு முன் ஆஜராகத் தவறினால், சந்தோஷ் கைது செய்யப்படுவார் என்றும் அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாஜக பொதுச் செயலாளர் பிஎல் சந்தோஷை விசாரிக்க, தெலங்கானா உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.

சிறப்பு குழுவின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த பிஎல் சந்தோஷ், தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார். அந்தவகையில் டிசம்பர் 5ம் தேதி வரை பாஜக பொதுச் செயலாளரை விசாரிக்க தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் எம்எல்ஏக்களை பேரம் பேசிய வழக்கை சிபிஐக்கு மாற்றி தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவையும் உயர்நீதிமன்றம் கலைத்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.