அமெரிக்காவில் பனிப்புயலால் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!

அமெரிக்காவில் பனிப்புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில் கடும் பனிப்புயல் நிலவி வருகிறது. இந்த திடீர் உறைபனியால் அந்நாட்டு மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். வளி மண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வெடிகுண்டு சூறாவளி எனப்படும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் பனிப்புயல் வீசி வருகிறது. மைனஸ் 48 டிகிரி செல்சியசில் குளிர் வாட்டி வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகள், மரங்கள் , சாலைகளில் பல அடி உயரத்திற்கு உறைபனி சூழ்ந்துள்ளது. அந்தவகையில் நெடுஞ்சாலைகள் அனைத்தும் பனியால் மூடப்பட்டுள்ளதாலும், பனிப்புயல் காரணமாகவும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் அங்கு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2,500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கடுமையான குளிர் வாட்டி வதைப்பதாலும், பனிப்புயல் வீசி வருவதாலும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கின்றனர்.

பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் ஹீட்டர்களை பயன்படுத்த முடியாமல் கடும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அத்துடன் அவசர உதவிக்கு கூட ஆம்புலன்சுகள் செல்ல முடியாத நிலை உள்ளதால், பனிப்புயலில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பனியால் உறைந்து கிடக்கும் கார்கள் மற்றும் சாலைகளில் பலர் உயிர் இழந்த நிலையில் கிடக்கின்றனர். இதுவரை பனிபுயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இந்த கடுமையான பனிப் புயலால் அமெரிக்கா மட்டுமின்றி கனடா உள்ளிட்ட நாடுகளும் கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.