மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்: அண்ணாமலை

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அங்குள்ள மக்களின் அடிப்படை குறைகளை பெரும் அளவில் அவர் தீர்த்து வருவதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கார் சிலிண்டர் வெடித்த விபத்து பெரும் விவாதப்பொருளானது. இதனை பயங்கரவாத தாக்குதல் என்று குற்றம்சாட்டி வரும் பாஜக தமிழ்நாடு அரசை சாடி வருகிறது. இந்த நிலையில் இன்று கோவை மேட்டுப்பாளையம் வரும் பாஜக தேசிய தலைவர், ஜே.பி.நட்டா இந்த கோயிலில் பூஜை செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், டெல்லியில் பனிமூட்டம் காரணமாக அவரது பயணம் தாமதமானது. இதனால் இந்த பூஜையில் அவர் பங்கேற்க இயலவில்லை. இதனை அடுத்து இன்று காலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக முன்னாள் தேசிய செயலாளார் எச்.ராஜா உள்ளிட்டோர் டவுன்ஹால் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வந்த அவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் மேளதாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதாக இருந்தது. இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட பனி மூட்டத்தின் காரணத்தினால் அவரது வருகை காலதாமதம் ஆனது. எனவே நாங்கள் கோவிலுக்கு வந்து தமிழ்நாடு மக்கள், இந்திய மக்கள் நலமாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தோம். தேசியத் தலைவர் வந்தவுடன் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்று மாலை மேட்டுப்பாளையம் பகுதியில் பொதுக்கூட்டம் உள்ளது.” என்றார்.

பாஜக தேசியத் தலைவர்கள் வந்தால் அதிமுக தலைமையினர் வழக்கமாக சந்திப்பார்கள். ஆனால் இம்முறை யாரும் சந்திக்காதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, “அதிமுகவை பொறுத்தவரை முன்கூட்டியே தேதி அறிவிக்கப்பட்டு அவர்களது கூட்டத்தை நடத்தி வருகின்றனர். பாஜக நிகழ்ச்சி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தான் ஏற்பாடு செய்யப்பட்டது. கோவையில் தொடங்கும் ஜேபி நட்டா பாஜக தேசியத் தலைவர் நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். அதன் முதல் பயணத்தை குறிப்பாக கோவை, நீலகிரியில் இருந்து துவங்க இருக்கிறார்.” என்றார்.

பாஜக எந்த அளவிற்கு வலுப்பெற்று உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, “பாஜகவை பொறுத்தவரை ஏற்கனவே கோவையில் ஒரு எம்எல்ஏ உள்ளார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கவனம் செலுத்தி வருகிறார். அங்குள்ள அடிப்படை குறைகளை பெரும் அளவில் தீர்த்து வருகிறார். மேலும் பாஜகவை அதிகமாக மக்கள் சார்ந்து உள்ள தேசியம் மிகுந்த பகுதி” என்று தெரிவித்து உள்ளார்.