புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது!

புத்தாண்டு 2023 கொண்டாட்டம் தொடர்பாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக காவல் துறை விதித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாடுவது தொடர்பாக தமிழ்நாடு காவல் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புத்தாண்டை முன்னிட்டு வரும் 31.12.2022 இரவு பொது இடங்கள் மற்றும் சாலைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டு விழாவை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. 31.12.2022 அன்று மாலை முதல் சுமார் 90,000 காவல் துறையினர் மற்றும் 10,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு வாகன பணியில் ஈடுபட்டு சோதனை தமிழகம் முழுவதும் சோதனை நடைபெறும்.
எனவே, 31ம் தேதி நள்ளிரவு மோட்டார் வாகனங்களில் தேவை இன்றி, சுற்றுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.

முதல் நாள் இரவும், புத்தாண்டு நாளிலும் கடற்கரைகளில் பொது மக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது. மது அருந்தியவர்கள் வாகனம் ஓட்டவே கூடாது. மீறினால் கைது செய்யப்படுவார்கள். மேலும் அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்படும். அதேப் போல் அதி வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துகளை தவிர்க்கவும் உயிர் சேதத்தை குறைக்கவும் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மோட்டார் வாகனங்களில் நீண்ட தூரம் இரவு நேரம் பயணிப்பவர்கள், 3 மணி நேரத்துக்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி, தேநீர் குடித்த பின்னரே பயணத்தை தொடர அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதற்காக இரவு முழுவதும் நெடுஞ்சாலைகளில் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன.

வழிபாட்டு தலங்களுக்கு காவல் துறையால் முறையாக பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முயற்சி செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். வெளியூர்களுக்கு செல்பவர்கள், அருகில் இருக்கும் காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்தால் பூட்டிய வீட்டின் அருகில் காவல் துறையினர் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும். இதனால் பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவங்கள் தவிர்க்கப்படும். கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல் துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனம் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். மேலும் இதுபோன்ற நபர்கள் குறித்த தகவலை காவல்துறைக்கு 100 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு தகவல் தரும் பொதுமக்கள் ரகசியம் காக்கப்படும்.

அதேபோன்று கட்டணம் இல்லா தகவல் தரும் அவசர உதவி தேவைப்படுபவர்கள் ‘காவல் உதவி’ என்ற அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். எனவே, அசம்பாவிதம் மற்றும் விபத்து இல்லாத புத்தாண்டு கொண்டாட தமிழ்நாடு காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.