வேலூர் சிறையில் உண்ணாவிரதம்: மயங்கி விழுந்த முருகன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் தனக்கு பரோல் வழங்கக் கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 5வது நாளான இன்று முருகன் மயக்கமடைந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் முருகனின் மனைவி நளினிக்கும் பரோல் வழங்கப்பட்டது. நளினிக்கு தொடர்ந்து 4வது மாதமாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம், தனது தாயைக் கவனித்துக் கொள்ள 30 நாட்கள் பரோல் வழங்குமாறு தமிழக முதல்வருக்கு நளினி கடிதம் எழுதினார். அதேபோல அவரது கணவர் முருகன், “எனது தந்தை வெற்றிவேல் கடந்தாண்டு இறந்தபோது இறுதிச்சடங்கு செய்வதற்காக பரோலில் செல்ல அனுமதி கேட்டும் வழங்கப்படவில்லை. தற்போது தந்தை இறந்து ஓராண்டு ஆகிறது. எனவே அவருக்குச் சடங்குகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்” என முதல்வருக்கு கடிதம் எழுதினார். ஆனால், நளினிக்கு மட்டும் பரோல் வழங்கப்பட்ட நிலையில், முருகனுக்கு பரோல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் கடும் விரக்தியில் இருந்து வந்துள்ளார் முருகன்.

இந்நிலையில், தனக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரி முருகன் வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 5வது நாளாக தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் முருகன். இதனால் முருகன் இன்று காலை மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். முருகன் மயக்கமடைந்ததால் அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்

முருகன் சிறையில் உண்ணாவிரதம் இருப்பது இது முதல்முறை அல்ல. சில ஆண்டுகளுக்கு முன், சிறையில் நடத்திய திடீர் சோதனையில் முருகன் அறையில் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதாக, அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார். இதனால் அவருக்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முருகன் 16 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். இதனால் அவரது உடல்நிலை மோசமாகி மயக்கமடைந்தார். 2020ல் தனது குடும்பத்தினருடன் வீடியோ கால் பேச அனுமதி அளிக்காததால், தொடர் உண்ணாவிரதத்தில் இருந்தார்.

இந்நிலையில்தான் தற்போது 5-வது நாளாக தண்ணீர் கூட அருந்தாமல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த நிலையில், இன்று காலை மயங்கி விழுந்துள்ளார். அவருக்கு சிறை மருத்துவமனையிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.