பள்ளி நிர்வாகங்கள் விதிகளை சரியாக புரிந்து செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

தேர்வு அறையின் வாசல் வரை காலணி அணிந்து வர தடை கிடையாது என்பதை தெளிப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் தேர்வெழுதுகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணிவரை தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு மையத்தில் கண்காணிப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், பறக்கும் படையினர் செயல்பாடு எப்படி அமைய வேண்டும், தேர்வு கூடத்திற்கு மாணவ-மாணவிகள் எவ்வாறு வர வேண்டும், எவ்வாறு விதிமுறைகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டது. அதில், பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் செல்போனை தேர்வு மைத்திற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை. ஷூ, பெல்ட் அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணிந்து வந்தால் கூட தேர்வு அறைக்கு வெளியே கழற்றி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி வளாகத்துக்கு உள்ளேயே மாணவர்கள் காலணி அணிந்து வர சில பள்ளிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்வு அறையின் வாசல் வரை காலணி அணிந்து வர தடை கிடையாது என்பதை தெளிப்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது.

மதுரை மகாத்மா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் +2 தேர்வு எழுதி முடித்து விட்டு, தகிக்கும் தார்சாலையில், காலணி அணியாமல் மாணவ, மாணவியர் துடித்துக் கொண்டு வந்த காட்சி காண்போர் அனைவரையும் கவலைகொள்ளச் செய்தது. பள்ளி நிர்வாகத்தின் புரிதலின்மையே இதற்குக் காரணம்.

மதுரையில் இன்று 40 டிகிரி செல்சியஸ் வெயில். கொதிக்கும் வெயிலில் நடந்தால் கால் பாதங்களில் கொப்பளங்கள் ஏற்படும். ஆணியோ, முள்ளோ குத்தி பாதிப்பு ஏற்பட்டால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படலாம். பள்ளி நிர்வாகங்கள் விதிகளை சரியாக புரிந்து செயல்படுத்த வேண்டும்.

தேர்வு அறையின் வாசல் வரை காலணி அணிந்து வர தடை கிடையாது. இதை தெளிவாக விளக்கி மாணவர்களை காலணி அணிந்து சாலைகளில் செல்வதை உறுதி செய்யும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.