கோரிக்கைகளை நிறைவேற்றிய மத்திய ரெயில்வே மந்திரிக்கு எல்.முருகன் நன்றி!

தமிழ்நாட்டில் கோரிக்கைகளை நிறைவேற்றிய மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு, இணை மந்திரி எல்.முருகன் நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர்-மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்திலும், சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் ரெயில் பாபநாசத்திலும் நின்று செல்ல வேண்டும், மேட்டுப்பாளையம்-கோவை இடையே மெமு ரெயில் சேவை வாரத்தில் 7 நாட்கள் இயக்கப்பட வேண்டும், மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் 2 தானியங்கி நடைபாதை அமைக்கவேண்டும் என்று மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் கோரிக்கை விடுத்திருந்தார். தமிழ்நாட்டின் இந்த கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய ரெயில்வே துறை மந்திரியின் உத்தரவின்படி, நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன், மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார். மேலும் நன்றி கடிதம் ஒன்றையும், மத்திய மந்திரியிடம், எல்.முருகன் வழங்கினார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நிறைவேற்றப்பட்டுள்ள கோரிக்கைகள் தமிழக மக்களுக்கு முழு ஊக்கத்தை தரும். இதுகுறித்து பயணிகள், மூத்த குடிமக்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும், இந்த திட்டங்கள் சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ் என்னும் பிரதமரின் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் ரெயில் சேவைகளை மேம்படுத்தும் தங்களது நோக்கம் இந்த வருட பட்ஜெட் ஒதுக்கீட்டில் பிரதிபலிக்கிறது. அந்தவகையில் 2023-2024 ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.6,080 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ரெயில் பயணிகளின் தேவைகளை அறிந்து உள்கட்டமைப்பை மேம்படுத்த முக்கியத்துவம் அளித்துவரும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வரும் நாட்களில் ரெயில்வே மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.