தமிழர்களை திமுக அரசு குடிகாரர்களாக மாற்றிவிட்டது: எச். ராஜா

இன்றைக்கு தமிழர்கள் வேலை செய்ய தயாராக இல்லை. அவர்களை திமுக அரசு குடிகாரர்களாக மாற்றிவிட்டது என்று எச். ராஜா கூறினார்.

தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், பலர் அடித்துக் கொலை செய்யப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் பரவிய செய்திகள் நாடு முழுவதும் புயலை கிளப்பின. பீகார் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் அளவுக்கு இது சென்றது. இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறை நடத்திய விசாரணையில் இவை அனைத்தும் போலி வீடியோக்கள் என்பது தெரியவந்தது. கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் என்றைக்கோ நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து, அது தமிழகத்தில் வட மாநிலத்தவருக்கு எதிராக நடந்தது போன்ற மாயத்தோற்றத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்கி வந்தது தெரியவந்தது. மேலும், பீகாரில் இருந்து தமிழகம் வந்த உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் இங்கு வட மாநிலத்தவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என அறிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, வட மாநிலத்தவர் குறித்த வதந்திகளை பரப்பியவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். குறிப்பாக, பீகார் பாஜக சமூக ஊடகப்பிரிவுதான் இந்த சதிச்செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீதும் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வருகிறது. மேலும், வட மாநிலத்தவர்கள் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, திரானி இருந்தால் தன்னை கைது செய்து பாருங்கள் என தமிழக அரசுக்கு அண்ணாலை சவால் விடுத்துள்ளார். இதனால் அண்ணாமலை கைது செய்யப்படுவாரா என்ற விவாதம் தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

இந்நிலையில், வட மாநிலத்தவர் விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:-

ஒருகாலத்தில், வட மாநிலத்தவர்களையும், இந்தி மொழியையும் அவதூறாக பேசி வந்த திமுகவினர், இன்று வட மாநிலத்தவருக்கு ஆதரவாக இருப்பது போல காட்டிக் கொள்கின்றனர். காரணம் என்ன.. தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் வட மாநிலத்தவர்கள்தான் வேலை செய்கின்றனர். அவர்கள் இல்லை என்றால் தமிழக பொருளாதாரமே சரிந்துவிடும். இதை நான் சொல்லவில்லை. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார். இன்றைக்கு தமிழர்கள் வேலை செய்ய தயாராக இல்லை. அவர்களை திமுக அரசு குடிகாரர்களாக மாற்றிவிட்டது. இப்போது வட மாநிலத்தவரை நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.

இப்போது வட மாநிலத்தவர்களுக்கு ஆதரவாக பேசும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் குறித்து விஷத்தை கக்கினார்கள். வட மாநிலத்தவர்கள் குறித்து முதல்வர் பேசியதையும் ஆர்.எஸ். பாரதி, பொன்முடி ஆகியோர் பேசியதையும் அடிக்கோடிட்டு காட்டி கருத்து தெரிவித்து வந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்வீர்களா? இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சும் கட்சியா பாஜக? நாங்களே பனங்காட்டு நரிகள். வழக்கை காட்டியெல்லாம் எங்களை பயமுறுத்த முடியாது. எங்கள் தலைவர் அண்ணாமலையை தொடடால் தமிழகம் தாங்காது. இதை ஓர் எச்சரிக்கையாகவே தமிழக அரசுக்கு கூறிக்கொள்கிறேன். இவ்வாறு எச். ராஜா கூறினார்.

முன்னதாக, செய்தியாளர் ஒருவர், பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை என்றும், அதனால்தான் அம்மாநிலத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதாக கூறுகிறார்களே.. என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த எச். ராஜா, “பீகாரில் வேலைவாய்ப்பு இல்லை என யார் சொன்னது.. டெல்லியில் லட்சக்கணக்கில் தமிழர்கள் இருக்கிறார்கள். கர்நாடகாவில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள். அப்படியென்றால், தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாததால்தான் அவர்கள் அங்கு இருக்கிறார்களா? என வினவினார்.