விரைவில் திமுகவை வீழ்த்தி கூட்டணியாக ஒன்றிணைவோம்: டிடிவி தினகரன்!

வரும் காலத்தில் அதிமுக ஒன்றிணையும் என்று கூறிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விரைவில் திமுகவை வீழ்த்தி கூட்டணியாக ஒன்றிணைவோம் என்று கூறியுள்ளார்.

சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எந்த வீட்டில் பெண்கள் கையில் அதிகாரம் இருக்கிறதோ, அங்கு ஆண்கள் நிம்மதியாக இருப்பார்கள். ஆணுக்கு பெண் சமமாக மதிக்கின்ற பண்பு தமிழ்நாட்டில் இருப்பதற்கு காரணம் தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் முயற்சிதான். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் தற்போது உருவாகவில்லை, உருவாகவும் முடியாது. ஜெயலலிதாவை எடப்பாடி பழனிசாமியுடன் ஒப்பிடும்போது சிரிப்புதான் வருகிறது.

மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என மாறு தட்டிக் கொண்டும், திமுகவின் மீது அதிருப்தி இருந்தும் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இரட்டை இலை இருந்தும், பணபலம் இருந்தும் அதிமுகவால் இன்று வெற்றி பெற முடியவில்லை. வரும் காலத்தில் அதிமுக ஒன்றிணையும். அதற்கான அறிகுறிகள் தான் தற்போது பார்த்து வருகிறோம். அமமுக மக்கள் மத்தியில் தைரியமாக செயல்படுகிறோம். எடப்பாடி பழனிசாமி தனியாக கட்சியை ஆரம்பித்து வென்று காட்டினால் அன்று மாறு தட்டிக் கொள்ளலாம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம். அதிமுகவாக ஒன்றிணைவோம் என சொல்லவில்லை. திமுகவை எதிர்த்து ஓர் அணியில் கூட்டணியாக ஒன்றிணைவோம். தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம். ஏப்ரல் இறுதிக்குள்ளாக மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து பணியை வேகப்படுத்தி வருகிறோம். தேனி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கள நிலவரங்களை ஆராய்ந்து வருகிறோம். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து திமுக ஆட்சியை அகற்ற சூழ்ச்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு, திமுகவின் அமைச்சர்கள் தான் சூழ்ச்சி செய்து வருகிறார்கள். சொந்த செலவில் சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். 1989ல் இருந்து அமைச்சராக இருக்கும் பொன்முடி பேசிய பேச்சு காட்டு மிராண்டித்தனமாகவும் அனைத்து அரசியல்வாதிகளும் தலைகுனியும் அளவில் இருக்கிறது என்று விமர்சித்தார்.

தொடர்ந்து திமுகவின் திட்டங்கள் பற்றிய கேள்விக்கு, சுயநல நோக்கத்தோடு தான் திமுகவின் தொலைநோக்குத் திட்டங்கள் இருக்கிறது தவிரே வேறு ஒன்றுமில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதார ரீதியாக பெரிய அளவில் அவர்கள் குடும்பம் வளர்கிறது. வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள் என பொய் பிரச்சாரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.